(2014.09.14 ஆம் திகதிய ராவய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
ஊவா மாகாண சபைத் தேர்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக அடையாளப்படுத்தப்படுவதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு புறம் அதிகளவில் மீறப்படும் தேர்தல் விதிமுறைகள்; இன்னொரு புறம் ஆளும் கட்சி தனது பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்வதும் அரச உடைமைகளை தனது நலனுக்காக பயன்படுத்துவதும்.
அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் உள்ளமை வெளிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனாலும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலமும், அந்தத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் கைக்கொள்ளும் மோசமான வழிமுறைகள் மூலமும் நாட்டின் ஜனநாயகம் பாதாளத்துக்குச் சென்றுள்ளத்தை ஜனாதிபதி தெரிவிக்காமை ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனெனில், அவர்தான் அந்த வழிமுறையின் ஸ்தாபகர்.
அதிகாரத்தில் உள்ள அரசாங்கம், தமக்கு சார்பாக உள்ள சந்தர்ப்பங்களில், தேர்தல்களை நடத்துவது இலங்கைக்கு புதியதொரு விடயம் அல்லாதபோதும், இவ்வாறு வருடம் முழுதும், நினைத்த நினைத்தவாறு தேர்தல்களை நடத்தும் வெட்கத்துக்குரிய வழிமுறை ஸ்தாபிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தின் மூலமே. இந்த ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கான சிறந்த உதாரணங்களுமாகும்.