ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா
கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!
1. உழ்ஹிய்யா
என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னத்)
ஆகும். இதனை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமைய, சமூக நால்லிணக்கத்தைக்
கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.
2.எமது
நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும்.
இவை ஆண் விலங்குகளாகவும், மாடு
இரண்டு வயது பூர்த்தியானதாகவும், ஆடு ஒருவயது
பூர்த்தியானதாகவும் இருத்தல் வேண்டும். முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்கு ஆடுகளைப்
பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
3.உழ்ஹிய்யா நடைமுறையானது நாட்டின் அனைத்து
முஸ்லிம்களும் ஏழை-பணக்கார விதியாசமின்றி ஈத் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு
வழிவகுக்கிறது. மேலும், இதன்
மூலம் நாட்டின் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேசிய விவசாயிகளும் கூடிய நன்மை
பெறுவார்கள். வருடாந்த உழ்ஹிய்யா நடவடிக்கை மூலம், சுமார் 250 மில்லியன் ரூபா தேசிய
உள்நாட்டு உற்பத்திக்கும், உள்நாட்டு
விவசாயிகளுக்கும் கிடைக்கப்பெறுகின்றது (மதிப்பீடு 2013).
4.அனைத்து சந்தர்ப்பங்களிலும்
மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது
அவசியமாகும்.
5.விலங்குகளை வாகனங்களில்
எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட
வேண்டியுள்ளது;
i.ஆடு/மாடுகளை
வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால் (GS) மிருகத்தின் உரிமை
அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும்.
ii.பின்னர்
மிருக வைத்தியரிடமிருந்து (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான
சான்றிதழ், மாட்டு
விபர சீட்டு(Cattle Voucher), சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health
Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
iii.மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport
Permit) பிரதேச
செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு
மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
iv.மேற்குறிப்பிட்ட
சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை
முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
v.மிருகங்களை
எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி
விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
(இலங்கைச் சனநாயக சோசலிசக்
குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 - 2009.11.26)
6. குர்பான் செய்வதற்குப்
பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள
வேண்டும். குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்
உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
7. குர்பான் தொடர்பான
விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன், தத்தமது மஹல்லாக்களை
மையப்படுத்தி பிரதேச சூழலுக்கு ஏற்ப பொது மஷூறாவின் அடிப்படையில் உழ்ஹிய்யா
விடயங்களை முன்னெடுப்பது சிறந்தது.
8. பள்ளிவாசல் வளவுகளுக்குள்
குர்பான் செய்யவதைத்தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஒரே இடத்தில் அதிகளவிலான
விலங்குககளை குர்பான் செய்வதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக பொருத்தமான பல
இடங்களைத் தெரிவு செய்து அங்கு குர்பான் நடவடிக்கைகளைச் செய்வது
விரும்பத்தக்கதாகும்.
9. பிரதேச உள்ளூராட்சி மன்ற
(மாநகர / நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய
அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
10.மிருக வைத்தியர்/
உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட
உரிமை உண்டு.
11.ஒரு மிருகத்தை குர்பானி
செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது
அவசியமாகும்.
12. குர்பானி செய்யும் முன்
கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
13.குர்பான் செய்யாப்பட்ட பின்
விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம், சாணம், தோல் என்பவற்றை) மிகவும்
பொறுப்புணர்வுடன், உரிய
முறையில் பூமியின் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
14. குர்பான் பங்கீட்டின்போது
ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும்
நடந்து கொள்ள வேண்டும்.
15. போயா தினங்களில் உழ்ஹிய்யா
கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில்
வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
16.ஜீவகாருண்யத்தை பற்றியும்
அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா
கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.
No comments:
Post a Comment